> குருத்து

June 5, 2025

Monster (2023) ஜப்பான்

 


ஒற்றை பெற்றோரான தாய் பள்ளி செல்லும் தன் பத்து வயது பையனிடம் சமீபத்தில் சில விநோதமான செய்கைகளைப் பார்த்து பதட்டமாகிறாள். பள்ளியில் ஏதும் சிக்கல் இருக்குமோ என சந்தேகித்து… போய் விசாரித்தால் சந்தேகம் ”உறுதியாகும்படி”யான மனநிலைக்கு நிர்வாகத்தினர் தள்ளுகிறார்கள்.  என்ன செய்வது என அறியாமல் குழப்பமடைகிறாள். அவளுடன் நாமும் குழப்பமடைகிறோம்.

 

இதுவரை நடந்த விசயங்கள் எல்லாம் இப்பொழுது மகனின் கோணத்தில் படம் விரிகிறது. ஓ! விசயம் அப்படியா போகிறது என புரிந்துகொள்கிறோம்.

 

அந்த பையனின் வகுப்பு ஆசிரியர் விசயங்கள் ஒவ்வொன்றாக காட்சிகளை சொல்லும் பொழுது….   ஓ! பிரச்சனை இப்படி போகிறதா! என ஆச்சரியப்படுகிறோம்.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****


படத்தின் பெயர் என்ன வகையான படம் என பார்வையாளனை கொஞ்சம் குழப்பிவிடும்.  இரண்டு பசங்க பேசி விளையாடும் பொழுது… பேச்சுக்குள் வந்து போகுமல்லவா அப்படி வருவது தான் ”மான்ஸ்டர்”.

 

துவக்கத்தின் அம்மாவின் பார்வையில் சொல்லப்படும் விசயங்களும், வந்தடைகிற முடிவுகளும், மற்ற கோணங்களில் காட்டப்படும் பொழுது,  நாம் பதட்டமாகிவிடுகிறோம்

 

நாம் வாழ்விலோ, பிறர் வாழ்விலோ ஒரு நடந்த நிகழ்வு குறித்து… முழுதான விவரங்களை கேட்டிருக்கிறோமா? மற்ற மற்ற கோணங்களில்  இருந்து யோசித்திருக்கிறோமா! அப்படியென்றால் அந்த தாயைப் போல எத்தனை தப்பும் தவறான முடிவுகளுக்கு வந்து சேர்ந்திருப்போம் என எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

 

குழந்தைகள், அவர்களிடம் பேசும் விசயங்கள், அவர்களை கையாள்வது என எல்லாவற்றிலும் கவனமாக இருக்கவேண்டும்.   ஒரு பிரச்சனையை சரியாக எதிர்கொள்ளாமல், பள்ளி பாதிக்கும் என்ற கோணத்தில் மட்டும் நிர்வாகத்தினர் சிந்திப்பது. அது எத்தனை கோளாறுகளை கொண்டு வருகிறது? 

 

படத்தில் வருகிற தாய், ஆசிரியர், இரண்டு பசங்க என அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  Hirokazu Kore-eda சிறப்பான இயக்கம் செய்திருக்கிறார். குழந்தைகளுக்கான இப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

 

பார்க்க வேண்டிய படம்.   அமேசானில் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

How to make a killing (2024) பிரெஞ்சு


பிரான்ஸ். எங்கும் வெண்பணி சூழ்ந்த ஒரு மலைப்பிரதேசம்.  ஒரு மாபியா கும்பல் போதை மருந்தை கைமாற்ற வருகிறார்கள்.    இரண்டு இடங்களில் ஒரு ஒற்றைக் கரடி குறுக்கிட… சீட்டு கட்டுகளை கலைத்துப் போட்ட மாதிரி ஆகிவிடுகிறாது.   இரண்டு குழுக்களில் மூன்று பேர் இறந்துவிட… மீதி உள்ள ஆட்கள் போலீசில் மாட்டிக்கொள்கிறார்கள்.

 

தன் மகனுடன் வாழ்ந்து வரும் கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் மரம் வெட்டி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலே நடந்த களேபரத்தில் அவர்களிடம் இரண்டு மில்லியன் யூரோ சிக்குகிறது.

 

இவர்கள் தடயங்களை அழிக்கிறேன் பேர்வழி என இருவரும் தடயங்களை விட்டுக்கொண்டே நகர்கிறார்கள்.

 

ஒரு பக்கம் போலீசு விசாரணை. இன்னொரு பக்கம் பணத்தை மீட்க கொலைகளுக்கு அஞ்சாத மாபியா கும்பல் முயல்கிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

 

****


ஒரு மலைப்பிரதேசம். இயல்பான மனிதர்கள். மந்தமான போலீசு.  அங்கு தீடீரென ஒரு களேபரம் நடந்தால்… என்ன நடக்குமோ அதை சரியாக எடுத்திருக்கிறார்கள்.

 

படத்தில் மெல்லிய அளவில் நகைச்சுவை இழையோடுகிறது.  இன்னும் சரியான விகிதத்தில் கவனமாக கலந்திருந்தால்… இன்னும் அருமையாக வந்திருக்கும்.

 

கொலை விசாரணையில் சிக்கும் அந்த காரில் தன் காதலனுடன் இருந்த அதிகாரியின் மகள். அவளிடம் விசாரணையும் செய்யவேண்டும்.  ஆனால் ஒத்துழைக்கவும் மறுக்கிறாள். இதற்காக மருகும் அதிகாரி.

 

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,  மனதளவில் விலகியிருப்பவர்கள். திடீரென பெரும் பணம் கிடைக்கிறது.  இப்பொழுது இருவரும் இணைந்து மிக கவனமாக செயல்படவேண்டும். ஆனால் தனித்தனியே சிந்தித்து இயங்கும் பொழுது ஏற்படும் கலாட்டாக்கள்.

 

கரடியைப் பார்த்ததும்.. அந்த மாபியா கும்பலில் “அய்யோ கரடி!” என தமிழில் பயந்து அலறுவார்.  பிரெஞ்சு படத்தில் தமிழா என பார்த்தால்… போதை மருந்தை கடத்தும் கும்பலில்… போதை மருந்தை கேப்ஸ்யூலாக முழுங்கி கடத்துபவராக தமிழர் ஒருவரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  அடப்பாவிகளா!

 

”ஜூராவில் ஒரு கரடி” என பிரெஞ்சில் இருந்த பெயரை பிற மொழிகளில் பிரபலப்படுத்துவதற்காக “கொலை செய்வது எப்படி?” என  அதிரடி பெயராக மாற்றியிருக்கிறார்கள். 1990களில் தெலுங்கு படங்களை இங்கு மொழி மாற்று செய்து வரும் பொழுது இப்படித்தான் பெயர் வைப்பார்கள்.

 

ஆஹோ ஓஹோ படம் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பேசும் பொழி பிரெஞ்சு. இங்கிலிஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

June 1, 2025

சிறார் இலக்கியம்



வீட்டில் அம்மா தேநீர் வாங்க கடைக்கு அனுப்புவார். அங்கு கிடக்கும் தினத்தந்தியில் படக்கதையான சிந்துபாத்தை எட்டு வயதில் படிக்க துவங்கினேன்.  பிறகு பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அம்புலி மாமா, பாலமித்ரா, படக்கதைகள் என 25 பைசா கொடுத்து.. இருட்டும் வரை படித்துவிட்டு வீடு திரும்புவேன்.

 

ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாய் இராஜேஷ்குமார் அறிமுகமாக,  ப.கோ. பிரபாகர், சுபா என துவங்கி… சுஜாதா, பாலகுமாரன், ஜானகிராமன் என நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இடது சாரி தோழர்கள் அறிமுகமானார்கள்.

 

ஜெயகாந்தன், கார்க்கி, டால்ஸ்டாய் என வாசிப்பு உலகம் விரிந்து பரந்தது.  இன்றைக்கும் என்னைப் பாதுகாப்பது, அறிவூட்டுவது எல்லாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள் தான். 

 

சமீபத்தில் சிறார் இலக்கியம் குறித்து எழுத்தாளர் விழியன் விரிவாக பேசிய உரையை கேட்டேன்.

 

காணொளி உலகமாக உலகம் மாறிவிட்ட பிறகு, குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிலை மாறிய பிறகு, ஓய்வு என இல்லாமல் நகரும் குழந்தைகள்.

 

சிறார் இலக்கியத்தின் வரலாறு, எப்பொழுது அதன் பொற்காலம், இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்தனைப் புத்தகங்கள் வெளிவந்தது. இப்பொழுது கணிசமாக குறைந்து போயிருக்கிறது. என்ன செய்யவேண்டும்? எழுதுவதில் எது உள்ளடக்கமாக இருக்கவேண்டும்? என அவர் பேசிய ஒரு மணி நேர உரை முக்கியமானது.

 


புத்தகங்கள் ஒருபக்கம் குறைந்திருக்கிறது. வாசிப்பது குறைந்திருக்கிறது என்றால்…  ஆண்டுக்கு சில நூறு படங்கள் வெளிவரும் நம் நாட்டில், சிறார்களுக்கான திரைப்படங்களும் மிகவும் குறைவு. அதுவும் நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரியவர்களுக்கான படத்தைத் தான் குழந்தைகளும் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள் என்பது பெரிய துயரம்.

 

இந்த நிலைமை மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த உரையில் சொல்லியிருக்கிறார் என்பது முக்கியமானது. அவசியம் கேளுங்கள். அந்த உரையின் சுட்டியை கீழே பகிர்ந்திருக்கிறேன்.